Sunday, January 15, 2023

விருச்சிகம் - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

 



விருச்சிகம்  - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

விருச்சிகம் ( விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை )

செவ்வாயின் ராசியில் பிறந்த நீங்கள் இயற்கையிலே எதிலும் துணிவோடு செயல்படக்கூடிய குணம் கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. சுக ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்க இருப்பதால் அலைச்சல், டென்ஷன், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வு நேரம் குறையும் நிலை, உடல் அசதி ஏற்படும். அசையும், அசையா சொத்து வகையில் சுபச்செலவுகள் உண்டாகும். உங்களது உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது, நேரத்திற்கு சாப்பிடுவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் பிறருடைய உதவி எதிர்பார்க்காமல் எதிலும் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால்தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். பண பரிமாற்ற விஷயங்களில் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டால் வீண் இழப்புகளை தவிர்க்க முடியும். பராமரிப்பு செலவு அதிகரிப்பதால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் குறையும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்போதைக்கு தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளும், பொருளாதார நிலை சிறப்பாக இருக்கக்கூடிய நிலை இருக்கும் என்றாலும் வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். மற்றவர்களுடைய பணியையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படலாம். ஒரு சிலருக்கு ஏற்படும் இடமாற்றங்களால் மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு வேறு இடங்களில் தங்க வேண்டிய நிலை உண்டாகும்.

வரும் நாட்களில் அர்த்தாஷ்டமச் சனி நடைபெற இருப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இக்காலங்களில் 22-04-2023 முடிய குரு பஞ்சம ஸ்தானமான 5-லும், 01-05-2024 முதல் 14-05-2025 வரை சமசப்தம ஸ்தானமான 7-லும் சஞ்சாரம் செய்ய இருப்பது உங்களுக்கு மிகவும் அனுகூலமான அமைப்பு என்பதால் சிறப்பான பொருளாதார நிலை, திருமண சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

இந்த தருணத்தில் வரும் 30-10-2023 முடிய ராகு 6-லும் அதன் பின்னர் வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை கேது 11-லும் சஞ்சாரம் செய்ய உள்ள அமைப்பானது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம், எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள், உற்றார் உறவினரின் ஆதரவால் உங்களின் தேவைகள் பூர்த்தியாக கூடிய ஒரு வாய்ப்பு உண்டாகும்.

 

உடல் ஆரோக்கியம்

எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள் என்றாலும் அலைச்சல் காரணமாக உடல் அசதி, சோர்வு உண்டாகும். உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். தேவையில்லாத பயணங்களை தவிர்த்தால் வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. மற்றவரிடம் பேசுகின்ற பொழுது சிந்தித்துப் பேசுவது உத்தமம். சுபகாரிய முயற்சிகள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். அசையும், அசையா சொத்துக்காகவும் சுபகாரியத்திற்காகவும் ஏற்படும் செலவுகள் காரணமாக உங்கள் கையிருப்பு குறையும் நிலை, கடன் வாங்கும் நிலை உண்டாகும். ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். பெரிய தொகைகளை கையாளுகின்ற பொழுது கவனத்தோடு ஈடுபடுவது நல்லது. உடனிருப்பவர்கள் செய்யும் செயல்களால் மன உளைச்சல் ஏற்படும் என்றாலும் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். கணக்கு வழக்கு இல்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்வதினை தவிர்க்கவும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும் என்றாலும் மறைமுக போட்டிகளும், எதிர்ப்புகளும் அதிகரிப்பதால் அடைய வேண்டிய லாபங்களில் சிறிது சுணக்கம் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாத காரணத்தினால் சில நேரங்களில் உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். அதன் காரணமாக உங்களின் ஓய்வு நேரம் குறையும் நிலை, உடல் அசதி ஏற்படும்.

உத்தியோகம்

பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலை பளு அதிகப்படியாக இருக்கும். உடன் வேலை செய்பவருடைய பணியையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நிலை உண்டாகும். எடுக்கும் பணிகளில் திறன் பட செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலையும் அதன் காரணமாக உடல் அசதியும் ஏற்படும்.

அரசியல்

நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். பேச்சில் பொறுமையோடு இருப்பது, பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தலைவர்களின் ஆதரவு கிடைத்தாலும் தேவையற்ற நெருக்கடிகளால் மன நிம்மதி குறையும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சாதகமாக இருந்தாலும் அதற்கான விலை சந்தையில் கிடைப்பதில் சிறிது தடைகள் ஏற்படும். போட்ட முதலீட்டை எடுக்க சற்று எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். புழு, பூச்சிகளின் தொந்தரவு காரணமாக பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத காரணத்தினால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது.

பெண்கள்

குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அலைச்சல் காரணமாக உடல் அசதி, சோர்வு ஏற்படும். வீடு, வாகனங்களை பராமரிப்பது காரணமாக செலவுகள் அதிகரிக்கும். வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும்.

கலைஞர்கள்

உங்களுக்கு வரும் நாட்களில் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளில் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவி விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் நீங்கள் அதிகம் உழைத்தால் தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதில் இழுபறி நிலை ஏற்படும். ரசிகர்களின் ஆதரவு சாதகமாக இருக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய நிலை உண்டாகும்.

மாணவ மாணவியர்

தேவையற்ற பொழுதுபோக்கையும், வீண் நட்புகளையும் தவிர்த்து விட்டு படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. ஆசிரியர் பெற்றோர் சொல்படி நடந்து கொண்டால் நல்ல பெயர் எடுக்க முடியும். போட்டி தேர்வுகளில் பங்கேற்கின்ற பொழுது முழு ஈடுபாட்டுடன் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

 

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில்             17-01-2023 முதல் 14-03-2023 வரை

சனி பகவான் 4-ல் ராசியாதிபதி செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். வேலைபளு அதிகரிப்பதால் ஓய்வு நேரம் குறையும். வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச் செலவுகள் உண்டாகும். குரு 5-ல், ராகு 6-ல் சஞ்சரிப்பதால் பண வரவுக்கு எந்த விதத்திலும் குறையில்லாமல் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் சிறு சிறு நெருக்கடி இருந்தாலும் நல்ல லாபங்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் வேலை செய்பவர்கள் வீண் பிரச்சினைகளை உண்டாக்கினாலும் அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு நல்ல நிலை அடைவீர்கள். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சிறப்பு.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்               15-03-2023 முதல் 17-06-2023 வரை

சனி ராகு நட்சத்திரமான சதயத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் சிறு சிறு நெருக்கடிகளை உண்டாக்கினாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருக்கும் என்றாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் ஆகும். ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சனிபகவான் வக்ர கதியில்                                18-06-2023 முதல் 04-11-2023 வரை

உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் இருப்பதாலும், ராகு 6-ல் இருப்பதாலும் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகி மனநிம்மதி உண்டாகும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே அன்னோன்யம் சிறப்பாக இருக்கும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை எளிதில் அடைய முடியும். உங்களுக்குள்ள கடன்கள் சற்று குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவானது சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்கள் பணியில் நிம்மதியுடன் பணியாற்ற முடியும். குரு 6-ல் இருப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 05-11-2023 முதல் 23-11-2023 வரை

சனி அவிட்ட நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதாலும், உங்கள் ராசிக்கு 5-ல் ராகு சஞ்சரிப்பதாலும் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் தடங்கல்கள் உண்டாகும். நம்பியவர்களே நெருக்கடிகளை தருவார்கள். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களின் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலைக்கு செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பண விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது உத்தமம். அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்               24-11-2023 முதல் 06-04-2024 வரை

சனி உங்கள் ராசிக்கு 4-ல் ராகு நட்சத்திரத்தில் இருப்பதால் நீங்கள் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. பண பரிமாற்ற விஷயங்களில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு 5-ல் ராகு, 6-ல் குரு சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். எந்த ஒரு செயலிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அனுகூலங்களை அடைய முடியும். நெருங்கியவர்களே மன அமைதியை குறைப்பார்கள். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களால் சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டால் நிலைமையை சமாளித்து வீண் இழப்புகளை தவிர்க்க முடியும். உத்தியோக ரீதியாக உங்கள் பணியில் மட்டும் சற்று கவனத்தோடு இருந்தால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். உணவு விஷயத்தில் கவனத்தோடு இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. விநாயகர் வழிபாடு, துர்க்கை வழிபாடு நன்மை தரும்.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில்                     07-04-2024 முதல் 29-06-2024 வரை

சனி 4-ல் குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 5-ல் ராகு சஞ்சரிப்பதாலும் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் நீங்கள் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. நியாயப்படி கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கூட கடைசி நேரத்தில் தட்டிப் போகும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், பிள்ளைகள் வழியில் தேவையற்ற நிம்மதி குறைவு உண்டாகும். உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிக்கும் குரு 01-05-2024 முதல் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருந்து கடன்கள் குறையும். உத்தியோக ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து நல்ல வாய்ப்புகளை அடைவீர்கள். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். ஆஞ்சநேயர் வழிபாடு, துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

சனிபகவான் வக்ர கதியில்                                30-06-2024 முதல் 15-11-2024 வரை

உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் குரு 7-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும் சகலவிதத்திலும் ஏற்ற மிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு இருந்த அலைச்சல், டென்ஷன், நிம்மதி குறைவுகள் விலகி மன அமைதி ஏற்படும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களுடைய ஆதரவு சிறப்பாக இருக்கும். பகைமை பாராட்டியவர்கள் கூட உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். தொழில் ரீதியாக நல்ல லாபமும், அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியடையும் நிலையும் இக்காலங்களில் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மன நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். துர்க்கைக்கு தீபம் ஏற்றுவது நன்று.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்               16-11-2024 முதல் 27-12-2024 வரை

சனி ராகு நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதாலும், 5-ல் ராகு சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அலைச்சல் காரணமாக மன நிம்மதி குறையும். பங்காளி வகையில் தேவையற்ற பகை உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படைவது மட்டுமில்லாமல் வண்டி, வாகனங்கள் மூலமாக எதிர்பாராத வீண் செலவுகளை எதிர்கொள்வீர்கள். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார விஷயங்களில் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்போதைக்கு தள்ளி வைக்கவும். அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்று.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில்                     28-12-2024 முதல் 29-03-2025 வரை

சனி உங்கள் ராசிக்கு 4-ல் குரு நட்சத்திரத்தில் இருப்பதால் சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். ராகு 5-ல் இருப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் ராசிக்கு சமசம ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிப்பதால் பண வரவுக்கு எந்த விதத்திலும் பஞ்சமில்லாமல் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நல்ல லாபங்கள் கிடைக்கும். திருமண சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் லாபகரமான பலன்களை அடையும் வாய்ப்பு உண்டு. வேலையாட்களை சற்று கவனத்தோடு கையாண்டால் எதையும் சமாளிக்க முடியும். அதிகாரியுடைய ஒத்துழைப்பு மிக மிக சிறப்பாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது மிகவும் சிறப்பு.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9              நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்,          கிழமை - செவ்வாய், வியாழன்

கல் - பவளம்,                        திசை - தெற்கு                     தெய்வம் - முருகன்

 

No comments: