Wednesday, December 13, 2017

2018 புத்தாண்டுப் பலன்கள்- ரிஷபம்


2018 புத்தாண்டுப் பலன்கள்- ரிஷபம்


 

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்

நேர்மையே குறிக்கோளாகக் கொண்டவராகவும் யாருக்கும் பயப்படாத குணம் படைத்தவராகவும் விளங்கும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.இந்த 2018- ஆம் ஆண்டுமுழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச்சனி நடைபெறுகிறது. குரு பகவானும் ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் வீண்செலவுகள் ஏற்படும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை குறையும். நெருங்கியவர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முய்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். சனி உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமாகி உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதி என்பதால் அஷ்டமச்சனிக் காலங்கள் பெரிய கெடுதல்களை ஏற்படுத்தாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின்மூலம் குரு பகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால் பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகளையும் பூர்த்திசெய்துவிட முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் கூட்டுத்தொழிலும் மேன்மையடையும். கடன்களையும் படிப்படியாகக் குறைப்பீர்கள். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.

உடல் ஆரோக்கியம் 

உங்களுக்கு அஷ்டமச்சனி நடைபெறுவதாலும், குரு 6-ல் சஞ்சரிப்பதாலும்  உடல் ஆரோக்கிய ரீதியாக அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு உடல்நிலை சோர்வடையும். நெருங்கியவர்கள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். மற்றவருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் அது உங்களுக்கே வீண்பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது போன்ற யாவும் மன நிம்மதியை உண்டாக்கும். ராகு 3-ல் இருப்பதாலும் ஆண்டின் இறுதியில் குரு 7-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை 

குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும், பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகள் ஏற்படக்கூடும். உற்றார் உறவினர்களும் வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் 11.10.2018-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின்மூலம் குரு 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். பணவரவுகள் சரளமான நிலையில் இருக்கும் புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். 

உத்தியோகம் 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் பணிகளை முழுமையாகமுடிக்க முடியாத சூழ்நிலை, பிறர் செய்யும் தவறுகளுக்கும் வீண்பழிகளைச் சுமக்கக்கூடிய நிலை ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களும் பணியில் நிம்மதிக்குறைவும் ஏற்பட்டாலும்  11.10.2018-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின்மூலம் குரு 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் ஓரளவுக்குக் கௌரவமான நிலையினை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை அமைய சற்றுத் தாமதமாகும்.

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் போன்ற யாவும் உண்டாகும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடும், தொழிலாளர்களால் வீண்பிரச்சினைகளும் ஏற்படும். என்றாலும் ராகு 3-ல் சஞ்சரிப்பதாலும், 11.10.2018-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின்மூலமும் குரு 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்துச் செயலாக்குவது நல்லது. பயணங்களால் சற்று அலைச்சல் ஏற்படும்.

பெண்களுக்கு  

அஷ்டமச்சனி நடைபெறுவதும், குரு 6-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் பிரச்சினை, நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு, பணவரவில் நெருக்கடி போன்றவை ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் வாயுத்தொல்லை, அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும். வரும் அக்டோபர் 11-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின்மூலம் குரு 7-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.

கொடுக்கல்- வாங்கல் 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண்பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வரும் அக்டோபர் 11-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின்மூலம் குரு 7-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் எதிலும் முன்னேற்றமான நிலை உண்டாகும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றிவிடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. பத்திரிக்கை நண்பர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வீண்வதந்திகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். ஆண்டின் பிற்பாதி ஓரளவுக்கு சாதகமளிப்பதாக அமையும். மக்களின் ஆதரவும் உங்களுக்கு சிறப்பாகக் கிட்டும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் தேவையற்ற வீண்விரயங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். முடிந்தவரை முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. 11.10.2018-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின்மூலம் குரு 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் வாழ்வில் ஓரளவுக்கு முன்னேற்றமும் நல்ல விளைச்சலும் உண்டாகும். சந்தையிலும் விளைபொருட்களை நல்லவிலைக்கு விற்கமுடியும். பூமி, மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். கால்நடைகளாலும் நல்ல லாபம் உண்டு.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நிறைய மறைமுக எதிர்ப்புகள், கிசுகிசுக்கள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். பணவரவுகளிலும் தேக்கநிலை ஏற்படும் என்றாலும் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப் பின் நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு வந்துசேரும். சுக வாழ்க்கைக்குப் பஞ்சம் இருக்காது.

மாணவ- மாணவியருக்கு

மாணவ- மாணவியருக்கு இந்த ஆண்டின் தொடக்கமானது சற்று சோதனை நிறைந்தாகவே இருக்கும். கல்வியில் ஈடுபாடு குறையும் என்றாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும், மதிப்பெண்கள் அதிகரிக்கும்.

மாதப் பலன்கள்

ஜனவரி: ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு. என்றாலும் 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக்குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்துச் சென்றால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனச்சேர்க்கைகள் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வதால் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 14-1-2018 மதியம் 1.11 மணி முதல் 17-1-2018 அதிகாலை 2.03 மணி வரை.

பிப்ரவரி: உங்கள் ராசிக்கு இம்மாதம் 7-ல் செவ்வாய், 9-ல் சூரியன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட் பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாகும் என்பதால் வீண்செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கணவன் - மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது சிறப்பு. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 10-2-2018 இரவு 7.49 மணி முதல் 13-2-2018 காலை 8.44 மணி வரை. 

மார்ச்: மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் ராசியாதிபதி சுக்கிரன் 11-ல் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப்பெறுவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தேவையற்ற அலைச்சல், டென்ஷன் போன்றவை உண்டாகும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தெய்வ காரியங்களுக்காக செலவுகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர்செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 10-3-2018 அதிகாலை 3.23 மணி முதல் 12-3-2018 மாலை 4.16 மணி வரை.  

ஏப்ரல்: ராகு 3-ல் சஞ்சரிப்பதாலும், மாத முற்பாதி வரையில் சூரியன் 11-ல் சஞ்சாரம் செய்வதாலும் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதால் வீண்விரயங்களைத் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். முருகனை வழிபடுவது உத்தமம். 

சந்திராஷ்டமம்: 6-4-2018 பகல் 11.38 மணி முதல் 9-4-2018 அதிகாலை 12.19 மணி வரை. 

மே: ஜென்ம ராசிக்கு ராகு 3-ல், புதன் 11-ல் சஞ்சரிப்பதும், 6-ல் குருவும், 8-ல் சனியும் வக்ரகதியில் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். பணம் பலவழிகளில் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன்கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த வகையில் லாபம் கிட்டும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 3-5-2018 இரவு 7.48 மணி முதல் 6-5-2018 காலை 8.17 மணி வரை மற்றும் 31-5-2018 அதிகாலை 3.08 மணி முதல் 2-6-2018 மதியம் 3.35 மணி வரை.  

ஜுன்: இம்மாதம் 6-ல் குருவும், 8-ல் சனியும் வக்ரகதியில் சஞ்சரிப்பதும், 3-ல் ராகு, 2-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் கைகூடும். கணவன் - மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும். ஆடம்பரச் செலவுகளை சற்றுக் குறைத்துக்கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது கவனம் தேவை. தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் லாபங்கள் தடையின்றிக் கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்கும் விஷயத்தில் சற்று கவனம் தேவை. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 27-6-2018 காலை 9.31 மணி முதல் 29-6-2018 இரவு 10.06 மணி வரை.  

ஜூலை: ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் தடையின்றி வெற்றிகிட்டும். கணவன் - மனைவியிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற முடியும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழிலில் சற்று மந்தமான நிலையிருக்கும். வேலையாட்களை அனுசரித்துச்செல்வது நல்லது. அம்மன் வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 24-7-2018 மதியம் 3.25 மணி முதல் 27-7-2018 அதிகாலை 4.11 மணி வரை.  

ஆகஸ்ட்: ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் ஏற்றமான பலன்கள் உண்டாகும்.புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வந்த பிரச்சினைகள் குறையும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே இருந்து வந்த பகைமை விலகி ஒற்றுமை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்கான பயணங்களையும் மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்லநல்ல வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.வாகனம் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். முருக வழிபாடு நல்லது. 

சந்திராஷ்டமம்: 20-8-2018 இரவு 9.37 மணி முதல் 23-8-2018 காலை 10.26 மணி வரை.  

செப்டம்பர்: இம்மாதம் 4-ல் சூரியன், 6-ல் குரு, 8-ல் சனி சஞ்சாரம் செய்வதால் வீண்பிரச்சினைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் சேமிக்கமுடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது,வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 17-9-2018 அதிகாலை 4.51 மணி முதல் 19-9-2018 மாலை 5.22 மணி வரை.   

அக்டோபர்: உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும், 11-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின்மூலம் குரு 7-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் குவியும். கணவன் - மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்லபெயரை எடுப்பீர்கள். பலருக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்பும் கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். சிலர் கட்டிய வீட்டை மேலும் புதுப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். கடன்கள் சற்றே குறையும். தொழில், வியாபாரம் நல்லமுறையில் நடைபெறும். விநாயகரை தினமும் வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 14-10-2018 மதியம் 1.11 மணி முதல் 17-10-2018 அதிகாலை 1.09 மணி வரை. 

நவம்பர்: ஜென்ம ராசிக்கு குரு 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், 3-ல் ராகு, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பல்வேறு பொதுக்காரியங்களில் ஈடுபட்டு பலருக்கு நன்மைகள் செய்யும் வாய்ப்பு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மற்றவர்களின் பாராட்டுதல்கள் மன மகிழ்ச்சியினை உண்டாக்குவதாக அமையும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குத் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவதால் மேலும் நற்பலன்களைப் பெறமுடியும்.

சந்திராஷ்டமம்: 10-11-2018 இரவு 9.56 மணி முதல் 13-11-2018 காலை 9.22 மணி வரை.  

டிசம்பர்: உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் குரு, புதன் சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். சொந்த வீடு, மனை, வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்திலிருந்த கடன் சுமைகள் சற்றே குறைவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொன், பொருள், சேரும். கொடுக்கல் - வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கை அளிப்பதாய் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடிவரும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவார்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிட்டும். சனிக்கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 8-12-2018 காலை 6.04 மணி முதல் 10-12-2018 மாலை 5.20 மணி வரை. 

அதிர்ஷ்டம் அளிப்பை

எண்- 5, 6, 8, நிறம்: வெண்மை, நீலம், கிழமை: வெள்ளி, சனி, கல்- வைரம், திசை- தென்கிழக்கு, தெய்வம்- விஷ்ணு, லட்சுமி.

No comments: