ஜென்ம லக்னத்தின் சிறப்பம்சம்
முருகு பாலமுருகன்
ஜோதிடம் என்பது மிகச் சிறந்த காலக் கண்ணாடி ஆகும். ஜெனன ஜாதகத்தைக்
கொண்டு ஒருவரது வாழ்க்கையைப் பற்றி தெளிவாக அறியலாம்.
ஜெனன ஜாதகத்தில் 1-ஆம் வீடு என வர்ணிக்கப்படும் ஜென்ம லக்னத்தின் சிறப்பம்சத்தைப்
பற்றி இங்கு பார்ப்போம். ஒரு பாவத்தைப் பற்றி ஆராய்கின்ற போது அதன் அதிபதியும் அதிலுள்ள கிரகமும் அதனை பார்வை செய்யும் கிரகமும் அதன் காரகனும்
முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஒரு பாவத்தில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெறுவது மிகவும்
சிறப்பான அமைப்பாகும். அது போல ஒரு வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு கேந்திரம் அல்லது
திரிகோணத்தில் இருப்பதும் நற்பலனை தரும். அடுத்து ஒரு பாவத்தை அதன் அதிபதி பார்வை செய்வது
மூலம் அக்கிரகம் ஆட்சி பெற்றால் என்ன பலன் தருமோ அதை விட சிறப்பான பலனை தரும். ஒரு
பாவாதிபதி பலம் பெற்று இருந்தால் அந்த பாவகத் தொடர்புடைய பலன்கள் சிறப்படையும். அதுவே
ஒரு வீட்டதிபதி நீசம் பெற்றாலோ வக்ரம் பெற்றாலோ அந்த பாவகப்பலனை அடைய முடியாது.
பொதுவாக ஜென்ம லக்னத்தை எவ்வளவு கிரகங்கள் பார்வை செய்கிறதோ அவ்வளவுக்கு
அவ்வளவு யோகம் ஆகும். சுப கிரகங்கள் லக்னத்தில் இருப்பது சிறப்பான அமைப்பாகும். பாவ
கிரகங்கள் லக்னத்தில் இருப்பது கிரகங்களின் இயல்பிற்கேற்ப சோதனையைத் தரும். எப்பொழுதுமே
லக்னாதிபதி ஜாதகருக்கு அனுகூலத்தை தருவார். லக்னாதிபதி பாவியாக இருந்தாலும் அந்த ஜாதகருக்கு
முழு சுபராகத் தான் விளங்குவார். பொதுவாக சுபர் கிரக பார்வை நல்லது. பாவிகள் பார்வை
கெடுதி. சனி பார்வை கெடுதி என்றாலும் சனி லக்னாதிபதி ஆக வரும் போது சனி பார்வை கெடுதியை
தராமல் நன்மையை தரும் அது தான் லக்னாதிபதியின் சிறப்பு.
ஜென்ம லக்னத்தைக் கொண்டு ஒருவரது தோற்றம், உடலமைப்பு, இயல்பு, சந்தோஷம்,
பழக்க வழக்கங்கள், தலை, தலை சார்ந்த பகுதி, உடம்பு, தாயின் தந்தை, தந்தையின் தாய் போன்றவற்றைப்
பற்றி தெளிவாக அறியலாம். ஜென்ம லக்னாதிபதி வலுவாக அமையும் போது சிறப்பான உடல் அமைப்பு,
நல்ல அழகான தோற்றம் தைரியம் துணிவு உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி ஆட்சி
உச்சம் பெறுவதும், கேந்திர திரிகோணத்தில் அமைந்து இருந்தாலும் சிறப்பான வாழ்க்கை செல்வம்
செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டாகும். லக்னாதிபதி நீசம் பெற்றால் பல்வேறு இடையூறுகளை
எதிர்கொள்ள நேரிடும். நீசம் பெற்ற லக்னாதிபதி நீச பங்க ராஜ யோகம் பெற்றால் தடைக்கு
பின்பு நல்ல வளர்ச்சி ஏற்படும். லக்னாதிபதி 6, 8, 12-ல் மறைந்து இருந்தாலும் வக்ரம்
பெற்றாலும் வாழ்வில் பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடும்.
ஜென்ம லக்னத்திற்கு 6, 7, 8-ல் தொடர்ந்து சுப கிரகங்கள் அமைவதும், அற்புதமான
அமைப்பாகும். இதன் மூலம் பலமான லக்னாதிபதி யோகம் உண்டாகும். குறிப்பாக 6, 7, 8-ல் குரு,
புதன், சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.
குறிப்பாக 6, 7, 8-ல் தொடர்ந்து சுபகிரகங்கள் அமைந்தால் அனுகூல பலனை உண்டாக்கும். ஜென்ம
லக்னத்தில் ஒரு சுப கிரகம் பலமாக அமையப் பெற்றால் நல்ல உடலமைப்பு உண்டாகும்.
பாவ கிரகம் பலமாக அமையப் பெற்றால் கெடுதிகள் ஏற்படும். குறிப்பாக லக்னத்தின்
முற்பாதியில் அமைந்தால் தலையில் இடது பாகத்தில் பாதிப்பும் பிற்பாதியில் பாவ கிரகம்
பலமாக அமைந்தால் தலையின் வலது பாகத்தில் பாதிப்பும் உண்டாகும். லக்னத்தில் பாவ கிரகங்கள்
அமையப் பெற்றால் தலையில் ஒரு தழும்பு உண்டாகும்.
ஜென்ம லக்னத்தில் சந்திரன் பலமாக அமையப் பெற்றால் வசிகரமான உடல் அமைப்பு
அழகான தோற்றம் இருக்கும். லக்னத்தில் அமையும் சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருந்தாலோ,
சர்ப்ப கிரக தொடர்போடு இருந்தாலோ சற்று குழப்பவாதியாகவும், ஜல தொடர்புடைய உடம்பு பாதிப்புகளை
எதிர் கொள்ள நேரிடும்.
லக்னாதிபதி செவ்வாயாக இருந்தாலும் லக்கினத்தில் செவ்வாய் வலுப் பெற்றாலும்
என்றும் இளைஞராக அதாவது முதுமையிலும் இளமை தோற்றம் உண்டாகும். தைரியம், துணிவு சிறப்பான
உடல் அமைப்பு ஏற்படும்.
லக்னாதிபதி புதனாக இருந்தாலும் லக்கினத்தில் புதன் வலுப் பெற்றாலும்
குழந்தை தனம் அதிகம் இருக்கும். நல்ல அறிவாளியாவும் பலருக்கு வழிகாட்ட கூடிய திறன்
இருக்கும்.
குரு லக்னத்தில் அமையப் பெற்றாலும் லக்கினாதிபதி குருவாக இருந்து வலு
பெற்றாலும் நல்ல உடல் அமைப்பும், மற்றவர்களிடம் பழகும் போது இனிமையாக பேசும் சுபாவமும்,
உதவி செய்யும் பண்பு, ஆன்மீக தெய்வீக எண்ணம் இருக்கும்.
சுக்கிரன் லக்னத்தில் அமையப் பெற்றால் ஆடம்பரப் பிரியராகவும் கவர்ச்சியான
உடல் அமைப்பும், சிறப்பான பொருளாதார நிலையும் இருக்கும்.
ஜென்ம லக்னத்தில் சூரியன் செவ்வாய் அமையப் பெற்றால் தைரியம், துணிவும்
மற்றவர்களை அதிகாரம் செய்யும் திறமை, தலைமை பண்பு கொண்டவராக இருப்பார்கள்.
செவ்வாய்- சனி அமையப் பெற்றால் முரட்டு தனம், பிடிவாத குணம் இருக்கும்.
மற்றவர்களை அதிகாரம் செய்யும் அமைப்பு, உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் சிகப்பு நிற தழும்பு
உண்டாகும்.
சனி- ராகு லக்னத்தில் அமையப் பெற்றால் முரட்டு தனம், பிடிவாத குணம்,
அசட்டு தைரியம், மூர்க்க குணம் கொண்டவராக இருப்பார்கள்.
கருப்பு நிற தழும்பு தலை பாகத்தில் இருக்கும்.
No comments:
Post a Comment