Monday, May 25, 2026

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - தனுசு ராசி

 ஒம்சரவணபவா

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - தனுசு ராசி

 

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

குருவின் ராசியில் பிறந்த நீங்கள் இயற்கையிலே மற்றவர்களுக்கு வழி காட்டுவதில் வல்லவராகவும் பொதுநல காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் விளங்குவீர்கள். உங்கள் ராசியாதிபதி குரு பகவான் இது வரை உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரித்து வந்தார். தற்போது ஏற்படக்கூடிய குரு பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 02-06-2026 முதல் 26-06-2027 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 26-05-2026 முதல் 13-06-2027 வரை) உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரம் ஆகும். உங்களின் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனத்தோடு செயல்பட வேண்டும். சக்திக்கு மீறிய வீண் செலவு ஏற்படக்கூடிய நேரம் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, பிறருக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

இக்காலத்தில் சர்ப கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு பகவான் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் வரும் 5-12-2026 முடிய சஞ்சரிப்பது சற்று அனுகூலமான அமைப்பு என்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளை எதிர் கொள்ளக்கூடிய பலம் கிடைக்கும். ராசியாதிபதி குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் தனது சிறப்பு பார்வையாக உங்கள் ராசிக்கு 2, 4, 12-ஆகிய ஸ்தானங்களை வரும் நாட்களில் பார்வை செய்ய இருப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்து வகையில் சுப செலவுகள் ஏற்படும். வீடுகளை பழுது பார்க்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பிறந்த ஊரை விட வெளியூர் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அமைப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பும் அதற்காக கடன் வாங்கக் கூடிய ஒரு சூழலும் உண்டாகும். பூர்வீக சொத்து வகையில் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

சுப காரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரம் என்பதால் சில விஷயங்களை கையாளுகின்ற பொழுது சற்று கவனத்தோடு கையாள்வது மிகவும் நல்லது. முக்கிய விஷயங்களை பொது வெளியில் பேசாமல் இருந்தால் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்க முடியும். அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பது மட்டுமில்லாமல் இந்த நேரத்தில் உங்கள் ராசிக்கு 4-ல் சனி அமையப்பெற்று அர்த்தாஷ்டம சனி நடப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் இருக்கும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் தேவையற்ற நெருக்கடிகளால் மன நிம்மதி குறைவு உண்டாகும். தாய் வழி உறவினர் வகையில் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் எந்த ஒரு செயல் செய்வதென்றாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவதன் மூலம் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதால் உங்களுக்கு ஒரு சில நேரங்களில் பணவரவுகள் வந்தாலும் லாபத்தை அடைய இடையூறுகள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது என்பதால் சில நேரங்களில் நீங்கள் நேரடியாக சில காரியங்களை செய்தால்தான் எடுத்த காரியங்களை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். தேவையற்ற நெருக்கடிகளால் உடல் அசதி, உடல் சோர்வு, ஓய்வு நேரம் குறையக் கூடிய ஒரு சூழல் உண்டாகும். தொழில் ரீதியாக சில சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது மிக மிக நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய வேலையையும் இணைத்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். பணியில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு சூழல் உண்டாகும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் தற்போது கவனத்துடன் செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தற்போது நீங்கள் இருக்கக்கூடிய நிலையே ஒரு சிறப்பான நிலை தான். ஒரு சிலர் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகள் நம்பி தற்போது இருக்கக்கூடிய வாய்ப்புகளை இழந்து விடாமல் இருப்பது நல்லது.

உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது அதிலும் குறிப்பாக உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். முடிந்தவரை இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. உடல் ரீதியாக சிறு பாதிப்பு இருக்கின்ற பொழுதே அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது மிகவும் நல்லது. ஒரு சிலருக்கு மனைவி, பிள்ளைகள் வழியில் தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் அவர்களது ஆரோக்கியத்திலும் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

தற்போது உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 9-ல் கேது என வரும் 5-12-2026 வரை சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் நீங்கள் சற்று தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்க கூடிய பலம் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடுகள் மூலமாக ஒரு சில எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

குரு அஷ்டமத்தில் சஞ்சரித்தாலும் குரு உங்கள் ராசிக்கு அதிபதி என்ற காரணத்தினால் நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் எதையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். வரும் 5-12-2026-க்கு பிறகு ராகு 2-லும் கேது 8-லும் சஞ்சரிக்க இருப்பதால் ராகு- கேது மாற்றத்திற்குப் பிறகு கணவன்- மனைவி இடையே சற்று விட்டுக் கொடுத்து செல்வது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தோடு செயல்படுவது மிகவும் நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் மன நிம்மதியற்ற நிலை நீடிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் வீண் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறைவு உண்டாகாது. உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெறுவீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமிது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமாக செயல்பட்டால் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களுக்கு சாதகமாக சுமுக தீர்வு ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

தொழில், வியாபாரம்

எடுக்கும் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். அதிகமான உழைப்பினை மேற்கொண்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் போட்டி பொறாமைகளை எளிதில் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்து கொள்வது நல்லது. வேலையாட்களும் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். வெளியூர் வெளிநாடு தொடர்புகளால் ஓரளவுக்கு அனுகூலங்களை பெற முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு செய்யும் நோக்கங்களில் சற்று கவனமாக செயல்படுவது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலைபளு அதிகரிப்பதால் உடல் நிலையில் சோர்வு உண்டாகி அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும்.

அரசியல்

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. மக்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு திருப்தியாக இருப்பதால் எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிக முயற்சிகளை எதிர்கொள்ள நேரிடும். பத்திரிக்கை செய்திகளாலும் தேவையற்ற வதந்திகளாலும் மன நிம்மதி குறையும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் உழைப்பிற்கேற்ற பலனை பெற முடியாமல் போகும். பூமி, மனை போன்றவற்றால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். வாய்க்கால், வரப்பு தொடர்பான வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். விளை பொருளுக்கேற்ற விலை சற்று குறைவாக கிடைக்கும். பொருளாதார நிலை சுமாராக தான் இருக்கும். பயிர்களை இன்சூரன்ஸ் செய்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் மானியங்கள் கிடைத்து ஆறுதல் அடைவீர்கள்.

கலைஞர்கள்

எதிர்பார்த்து காத்திருந்த பட வாய்ப்புகள் ஓரளவுக்கு கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகளால் சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும். வரவேண்டிய பணத் தொகைகளும் சற்று தாமதப்படுவதால் சில நேரங்களில் கடன் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களிடம் பழகும் போதும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கும் போதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற கிசு கிசுக்களால் சற்று மன நிம்மதி குறையும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் சில தடைகளுக்கு பின் நிறைவேறும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு அமைந்து குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பிள்ளைகளால் மன சஞ்சலங்களையும் எதிர்கொள்வீர்கள். தங்களுடைய மனக்குறைகளை கூட தகுதியானவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் நல்ல பதவியை அடையும் யோகம் உண்டு.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று அதிக கவனம் எடுக்க வேண்டிய காலமாகும். மந்த நிலை, ஞாபக மறதி இருந்தாலும் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் மனது அலைபாய கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது, பெற்றோர் சொல்படி நடப்பது நல்லது.

 

குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில்  31-10-2026 முதல் 13-12-2026 வரை

குருபகவான் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 9-ல் சஞ்சரிப்பதும், 3-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் வரவுகள் மிக சிறப்பாக இருக்கும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள்.

குரு பகவான் வக்ர கதியில்  13-12-2026 முதல் 13-04-2027 வரை

குரு வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதால் ஒரு சில அனுகூலங்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ராகு 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது வயது மூத்தவர்களிடம் பேச்சை குறைப்பது நல்லது. கேது 8-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் செயல்படுவது உடல் நலத்திற்கு நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த உயர்வுகளை பெறலாம். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். தற்போது சற்று முனைப்புடன் பணியாற்றினால் விரைவில் சிறப்பான நிலை ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் தொடர்ந்தாலும் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் சம்பளம் சற்று குறைவாக இருக்கும்.

 

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 8-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவிப்பது, வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு யந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும்.

உங்கள் ராசிக்கு 4-ல் சனி சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது. ஆஞ்சநேயரையும், வெங்கடாசலபதியையும் வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

உங்கள் வரும் 5-12-2026 முதல் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9          நிறம் - மஞ்சள், பச்சை              கிழமை - வியாழன், திங்கள்

கல் - புஷ்ப ராகம்   திசை - வடகிழக்கு                      தெய்வம் - தட்சிணா மூர்த்தி

No comments: